தூத்துக்குடியில் மீன் பிடிக்க சென்ற பொழுது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த வேம்பார் பெரியசாமி புரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின் இவர். மீன் பிடிக்கும் தொழிலை செய்து வருவதோடு மீனவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் தனது சொந்த நாட்டுப் படகில் அவரது நண்பர் தேவ திரவியம் என்பவரது மகனான ஜஸ்டின் அழைத்துக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் நடுக் கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்த சமயத்தில் காலை 7 மணி அளவில் கடலுக்குள் பலத்த இடி மின்னலுடன் மழை பொழிய ஆரம்பித்தது.
அப்போது நாட்டுப்படகில் திடீர் என்று மின்னல் தாக்க இருவரும் படுகாயமடைந்தனர். அப்பொழுது ஜஸ்டின் நிலைதடுமாறி கடலுக்குள் மயங்கி விழுந்து மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவ்வழியாக படகில் சென்ற மீனவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடுமட்டுமல்லாமல் ஜோசப் ஸ்டாலினை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் அறிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் ரோந்து படகில் சென்று தவறி விழுந்து கடலுக்குள் உயிரிழந்த ஜஸ்டினை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மீனவர்களும் நாட்டுப்படகில் ஜஸ்டிணை தேட ஆரம்பித்தனர். இவ்வாறு இருக்கையில் மாலை நேரம் பெரியசாமிபுரம் கடற்கரையில் ஜஸ்டின் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.