புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் என்ற பகுதியில் உள்ள தனியார் ஆயில் மில், சென்னை முகப்பேரில் ஏஜெண்ட்டாக செயல்பட்டு வரும் நிறுவனத்திடமிருந்து எண்ணையை ஆர்டர் கொடுத்து வாங்கியது. அதன் பெயரில் அந்த நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள பாமாயில் தொழிற்சாலையில் 40 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு 29.96 மெட்ரிக் டன் சமையல் எண்ணெயை கொள்முதல் செய்து ஜூலை மாதம் 24ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் லாரி வரவில்லை. இதுகுறித்து ஆயில் மில் நிர்வாகம் சென்னையிலுள்ள நிர்வாகத்திடம் தெரிவித்தது.
இதையடுத்து அந்த நிறுவனம் லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் விசாரணை செய்தபோது, லாரி மாதவரம் பகுதியில் தனியாக நின்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்று அந்த லாரிக்கு மாற்று டிரைவர் வைத்து புதுச்சேரி ஆயில் மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் லாரியை சோதனை செய்த போது எண்ணெயில் தண்ணீர் கலந்து இருப்பது தெரியவந்தது. நான்கு டன் எண்ணெய் திருடப்பட்டு அதற்கு பதிலாக தண்ணீர் கலந்து திருட்டை மறைக்க மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனால் 40 லட்சம் மதிப்பிலான எண்ணெய் பயன்படுத்த முடியாமல் வீணாகப் போனது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் லாரி ஓட்டுநர் கருப்புசாமி க்ளீனர் பாலசுப்பிரமணியன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.