இளம்பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது தோழியான திவ்யா என்ற பெண்ணுடன் காரில் பொம்மையார்பாளையம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து கடற்கரை அருகில் நின்று இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அங்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அந்த வாலிபர் சப்-இன்ஸ்பெக்டர் அழைத்து வரச்சொன்னார் என்று விக்னேஷிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய விக்னேஷ் அவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றுள்ளார். அதன் பின் அங்குள்ள தங்கும் விடுதி முன்பு விக்னேஷை இறக்கி விட்டு அந்த வாலிபர் மீண்டும் பொம்மையார்பாளையம் நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து திவ்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.