மருத்துவமனை மேலாளரிடம் பணம் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
மயிலாடுதுறை மாவட்டத்தில் பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்து தனியார் மருத்துவமனையில் கடந்த 13 ஆம் தேதியன்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மருத்துவமனை கதவின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளார். இவர் திருட முயற்சி செய்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி ,சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அத்துடன் அன்றைய தினமே பகலில் மருத்துவமனைக்கு வந்துள்ள அந்த மர்ம நபர் மருத்துவமனை மேலாளரான வைத்தீஸ்வரன்கோவில் வடக்கு வீதியை சேர்ந்த நவீன் குமார் என்பவரின் சட்டைப்பையில் இருந்த 200 ரூபாயை திருடிச் சென்றுள்ளார்.
இதனால் இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக மேலாளர் நவீன் குமார் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இவரின் புகாரின்பேரில் சிசிடிவி கேமராவில் இருந்த பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் மருத்துவமனையில் திருட முயற்சித்ததும், மேலாளரிடம் இருந்து திருடி சென்றதும் ஒரே நபர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து திருமஞ்சன வீதி எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த முகமது மைதீன் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.