பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை அருகே கேரளா அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்வதை கண்டித்தும், மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தியும், லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு பதிலாக மாற்று திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்பாட்டத்திற்கு கம்பம் ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூடலூர் நகர செயலாளர் ராஜீவ், கூடலூர் விவசாய சங்கத்தினர் ரமேஷ்பாபு, கொடியரசன், ஜெகன், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர்.