நான் ஒரு சூப்பர் மாடல் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் திரை பிரபலங்கள்தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்தவேண்டும் எனவும் மிக இழிவாகப் பேசியுள்ளார்.
அதனால் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகை மீரா மிதுனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் தாராளமாக என்னைக் கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போக வில்லையா? என்று கூறிய மீரா மிதுன், என்னை கைது செய்வது என்பது நடக்காது. அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும் என்று போலீசுக்கே சவால் விடுத்துள்ளார்.