ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் அவரது பெயர் கொண்டவருக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று கரூரில் ஒரு பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் சோப்ராவை கௌரவிக்கும் விதமாக கரூர் மாவட்டத்தில் சுங்க கேட் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நீரஜ் சோப்ரா என்ற பெயர் உள்ளவர்களுக்கு தலா 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையத்தின் வெளியே வைக்கப்பட்ட பதாகையில் நீரஜ் என்ற பெயர் உள்ளவர்கள் எங்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்தால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டையை காண்பித்து 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக பெற்றுக் கொள்ளும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.