வரலட்சுமியை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வழிபாடு செய்யலாம். நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி வரலட்சுமி பூஜை கொண்டாடப்பட உள்ளது. மகாலட்சுமியை வணங்குவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம் முன்னோர்கள் கூறிய இறைநம்பிக்கை. இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதால் நம் வாழ்க்கையில் அனைத்து வகை செல்வங்களையும் நம்மால் பெற முடியும். குறிப்பாக பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்கரித்து விரதம் இருந்து அம்மனுக்கு பிடித்த பாடல்களை பாடி அம்மனுக்கு வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.
பூஜையின் முதல் நாள் தென் கிழக்கு மூலையில் ஒரு இடத்தில் சாணம் தெளித்து, கோலமிட்டு பூஜைக்கு தேவையான பொருள்களை வைத்து அன்று இரவு முதலே வழிபாடு செய்ய வேண்டும். பூஜை அன்று அம்மனுக்கு பல வகையான பிரசாதங்களை படையலிட்டு சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, ரவிக்கைத்துணி, இனிப்பு, பழம் ஆகியவற்றை கொடுத்து உபசரிக்க வேண்டும். பிறகு அனைவரும் ஒன்றுகூடி வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதில் ஆண்களும் மகாலட்சுமியை வழிபாடு செய்யலாம். அப்படி செய்தால் குபேரனின் அருள் கிடைக்கும்.