குடிநீர் கேட்டு குடங்களுடன் திடீரென்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வைப்பம் கிராமத்தில் சுமார் 2 – ஆண்டுகளுக்கும் மேலாகவே குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது சுண்டக்குடி செல்லும் சாலையில் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி இல்லை என கூறியுள்ளனர்.
இது குறித்து பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் தங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்ட் வட்டார அலுவலருக்கு தொலைபேசியின் மூலம் குடிநீர் பிரச்சினை குறித்த தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்பு அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். அதன் பிறகு பொதுமக்கள் மறியலிலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.