நடிகர் விக்ரம் அடுத்ததாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், சியான் 60 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கோப்ரா திரைப்படம் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்து வரும் சியான் 60 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுதவிர கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இதை தொடர்ந்து நடிகர் விக்ரமின் அடுத்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இவர் ஜெயம் ரவியின் கோமாளி படத்தை இயக்கி பிரபலமடைந்தவர். இந்நிலையில் இதனை விக்ரம் தரப்பு மறுத்துள்ளது. அதாவது நடிகர் விக்ரம் கைவசம் வைத்துள்ள படங்களில் நடித்து முடித்த பின்பு தான் அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்வார் எனக் கூறி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.