தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காலை 10 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், துறையின் முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். வீடு தேடி வாகனம் மூலம் மருத்துவ சேவை அளிக்க இந்த திட்டம் வகை செய்கிறது. வாகனத்தில் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்டோர் மக்களைத் தேடிச் சென்று பொது மருத்துவம் அளிக்க இருக்கின்றனர்.