ஆலங்குளம் பகுதியில் கம்பு சாகுபடியில் மகசூல் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கொங்கன்குளம், தொம்பக்குளம், கோடாங்கிபட்ட, மேல பழையாபுரம், கீழபழையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கம்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கம்பு பிராய்லர் கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றது. இதுகுறித்து விவசாயி வேல்முருகன் கூறியபோது, ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கம்பு சாகுபடி செய்யப்பட்டு இருக்கின்றது. இது 4 மாதத்தில பலன் தரக்கூடியதாக இருப்பதனால் கிணற்றுப் பாசனத்தின் மூலம் சாகுபடி செய்து வருவதாக விவசாயி தெரிவித்துள்ளார். எனவே இதற்கு முன்பு 1 ஏக்கருக்கு 12 குவிண்டால் முதல் 15 குவிண்டால் வரை மகசூல் கிடைத்தது. ஆனால் தற்போது ஏக்கருக்கு 10 குவிண்டால் வரை தான் கிடைக்கிறது என்று விவசாயி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று கடந்த ஆண்டு 1 குவிண்டால் கம்பு 2 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி சென்றனர். ஆனால் தற்போது 1,700 முதல் 1,800 வரை மட்டும் விற்பனை நடைபெறுவதால் மகசூல் மற்றும் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். இங்கு விளைவிக்கப்படும் கம்பு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டாலும், நாமக்கல்லுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆகவே கஷ்டப்பட்டு உழைத்தும் எதிர்பார்த்து வந்த மகசூலை பெறாததால் தாங்கள் கவலை கிடமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் நாங்கள் எதிர்பார்த்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.