திருட முயற்சித்ததாக விசாரணைக்கு அழைத்து சென்ற வடமாநில தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் மில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மில்லில் வேலை பார்ப்பதற்காக ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கடந்த வாரம் கஜேந்திரன் பிரசாத் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மில்லில் இருந்து வெளியேறிய கஜேந்திர பிரசாத் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் இருக்கும் மணி என்பவரது வீட்டு காம்பவுண்டு சுவரை ஏறி குதித்துள்ளார். இது குறித்து அறிந்த மணி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்த கஜேந்திர பிரசாரத்தை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதன்பிறகு காவல்துறையினர் கஜேந்திர பிரசாத்தை விசாரணை செய்வதற்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது திடீரென அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் காவல்துறையினர் ஆட்டோவில் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கஜேந்திரபிரசாத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருட முயற்சிக்கும் போது பொதுமக்கள் தாக்கியதால் க்ஜேந்திர பிரசாத் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.