Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

3 மாதங்களுக்கு பிறகு மீண்டும்…. சமூக இடைவெளியுடன் மக்கள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

ஊரடங்கில் அறிவித்த தளர்வின்படி உழவர் சந்தை இயங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் ராபின்சன் குளக்கரை பகுதியில் உழவர் சந்தை நடைபெற்று வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 11- ஆம் தேதி உழவர்சந்தை அடைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்காலிகமாக சிலநாட்கள் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேளாண் விற்பனை துறை துணை இயக்குனர் நரசிம்ம ரெட்டி ஆகியோர் உத்தரவின்படி, 3 மாதங்களுக்கு பிறகு குடியாத்தம் உழவர் சந்தை நடைபெற்றது.

இதனால் சந்தையின் நிர்வாக அதிகாரி லோகப்ரியன் தலைமையில், பணியாளர்கள் அந்த சந்தையை தூய்மை செய்து சுகாதார பணியினை செய்தனர். மேலும் 65 கடைகள் வைக்க வேண்டிய இடத்தில் 35 கடைகள் வைக்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் மற்றும் காய்கறிகள் வாங்க வந்த மக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சந்தை செயல்பட்டதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |