பழுதடைந்த ஷட்டரை சரி செய்ய கோரி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு பகுதியில் புங்கக்குளம், பாதரங்குளம், பெரியகுளம் உள்ளிட்ட 40 கண்மாய்கள் உள்ளது. இந்நிலையில் புங்கக்குளம் கண்மாயை நம்பி 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதனையடுத்து வத்திராயிருப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் 40 கண்மாய்களும் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் புங்கக்குளம் கண்மாய் ஓரளவிற்கு நீர் நிரம்பி காணப்படுகிறது. இதனையடுத்து புங்கக்குளம் கண்மாயில் உள்ள ஷட்டர் பழுதடைந்துள்ளது. இதனால் ஷட்டரிலிருந்து தொடர்ச்சியாக நீர் வீணாகி அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே புங்கக்குளம் கண்மாயில் உள்ள பழுதடைந்த மதகை சீர்செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்தினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.