பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அருகில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணகி தலைமையில் செங்கம் மருத்துவ அலுவலரான அருளானந்தம், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையில் போலீசார் ஆகியோர் போலி மருத்துவர்களை பிடிக்க புதுப்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால் அதிகாரிகள் வருவதை கண்ட போலி மருத்துவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இந்த மருத்துவமனையில் மருத்துவப் படிப்பை படிக்காமல் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த துரைஜெயராமன் மற்றும் குமார் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது . இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கு முன்னதாக குமார் நடத்தி வந்த மருத்துவமனையில் உள்ள பொருட்களை சுகாதாரத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.