வேலையிலிருந்து திடீரென நீக்கியதால் பயிர் காப்பீட்டுத் திட்ட பணியாளர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுவன்னஞ்சூவரை பகுதியில் விவேகானந்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சங்கராபுரம் வேளாண்மை அலுவலகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு தற்காலிக பணியாளராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விவேகானந்தனை திடீரென பணிக்கு வரவேண்டாம் என்று உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த விவேகானந்தன் சங்கராபுரம் வேளாண்மை அலுவலகம் முன்பு மனைவி சாவித்திரி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி, விவேகானந்தரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வேலை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரி உறுதியளித்ததை அடுத்து விவேகானந்தன் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து குடும்பத்துடன் சென்றுள்ளார்.