தெலுங்கானாவில் 29 வயதான கான்ஸ்டபிள் ஒருவர் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்று கூறி மன உளைச்சலுடன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 29 வயதான சித்தாந்தி பிரதாப் என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்துள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில் குறிப்பிட்டதாவது, சார்மினார் காவல் நிலையத்தில் சித்தாந்தி பிரதாப் என்னும் நான் சில கோரிக்கைகளை உங்களின் கவனத்திற்கு முன் வைக்கிறேன். நான் கடந்த 2014 ஆம் ஆண்டு தெலங்கானா காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தேன். காவல்துறையில் எனக்கு ஏற்பட்ட அதீத ஈடுபாட்டின் பெயராலேயே இப்பணிக்கு வந்தேன். இதுவரை எனது கடமையை சிறப்பாக செய்துள்ளேன். எனினும் கடந்த சில மாதங்களாக என்னுடைய சீனியர் அதிகாரிகள் பணியில் இருந்து ஓய்வு பெறுவதை பார்த்து வருகிறேன். அவர்கள் பெரும்பாலும் 35 ஆண்டுகளுக்கு மேலாக கான்ஸ்டபிளாக பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பணியில் உயர்வு கிடைக்காமல் சிறப்பு ஊதியம் மட்டும் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் எஸ்ஐ மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் பணி உயர்வு பெற்று சகல வசதிகள் பெற்று வருகின்றனர்.
எனக்கு தற்போது 29 வயது ஆகிறது. நான் எனது திருமணத்திற்கு பெண் தேடி வருகிறேன். என்னை வரன் பார்த்த பெண் ஒருவர் நான் கான்ஸ்டபிள் என்பதால் என்னை திருமணம் செய்ய சம்மதிக்க வில்லை. “அத்துடன் என்னுடைய உறவினர்களிடம் அவர் கான்ஸ்டபிளாக இருந்தால் கடைசிவரை கான்ஸ்டபிள் ஆகவே இருப்பார். எனவே அவரை திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறியுள்ளார். இதனைக் கேட்ட பிறகு நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனால் என்னுடைய பதவியை நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ஆகவே என்னுடைய ராஜினாமாவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.