அனுமன் ‘சர்வ வியாகரண பண்டிதன்’ என்று அழைக்கப்படுவதன் காரணம் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
அனுமனை சொல்லின் செல்வன் என அழைப்போம். அவருக்கே பாடம் நடத்திய பெருமை சூரியனை சேரும். ஒருமுறை அனுமன், பழம் என்று சூரியனை தவறாக கருதி வானமண்டலத்திற்கு தாவினார். சூரியனின் இயக்கம் தடைபட்டது. இதனால் உலகமே அசையாமல் நின்றது. விஷயத்தை அறிந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் அனுமனின் முகத்தில் ஓங்கியடிக்கவே அவருக்கு தாடை வீங்கியது.
அவரது முகம் மாறியதற்கு காரணம் இதுதான். மயங்கிய குழந்தை அனுமனைத் தாங்கிப்பிடித்தார் வாயுபகவான். கோபமடைந்த வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதனப்படுத்தினர். தன் தவறுக்கு பரிகாரமாக அனுமனுக்கு மந்திர உபதேசம் செய்தார் சூரியன். அன்று முதல் அனுமன் ‘சர்வ வியாகரண பண்டிதன்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். இப்பெருமைக்கு காரணமானவர் அனுமனின் ஆசானான சூரியனே.