இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் கலைஞர் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வணிக வளாகத்தில் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்று சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ராமச்சந்திரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் நேற்று இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.