தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அரசு அறிவித்துள்ளது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கும் மட்டும் அனுமதி. மூன்று வகையான மாவட்டங்களைப் பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் திருமண நிகழ்வுகளுக்கு வகை 2,3 இல் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்ட ஆட்சியரிடம் இருந்து eregister.tnega.org என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி மற்றும் குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.