மனவருத்தத்தில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளகாலை பகுதியில் கூலித்தொழிலாளியான பரமசிவம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நீண்டகாலமாக மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமசிவனின் மனைவி இனிமேல் மது அருந்தக் கூடாது என்று அவரிடம் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பரமசிவன் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் பரமசிவன் மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டு அங்குள்ள அம்மன் கோவில் அருகில் படுத்துக்கொண்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நீண்டநேரமாகியும் பரமசிவன் எழுந்திருக்காததால் சந்தேகமடைந்து அவரை எழுப்பவதற்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் வாயில் நுரை வந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பரமசிவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.