மதுரை திருமங்கலம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தாக்குதல் நடத்தி தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பின் ஐந்து பேர் காரில் ஏறி மதுரையை நோக்கி தப்பிச்செல்ல ஒருவர் மட்டும் மாட்டி கொண்டார். பின் அவரை சுங்கச்சாவடி ஊழியர்கள் மடக்கிப் பிடிக்க முயன்றபோது திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் அதிர்ஷ்டவசமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். மர்ம நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர். காயமடைந்தவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.