வயிற்றில் துணியை கட்டி கர்ப்பிணி போல் நடித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் பரிமளா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெருமாள் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி குழந்தை இல்லாத காரணத்தால் அவர் பரிமளாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் ராஜ்குமார் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரிமளா திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கர்ப்பம் தரித்த 2 மாதத்திலேயே பரிமளாவின் கர்ப்பம் கலைந்துவிட்டது. இதனை வீட்டில் இருப்பவர்களிடம் கூறாமல் வயிற்றில் துணியை கட்டி கர்ப்பிணியாக இருப்பது போல் பரிமளா நடித்துள்ளார். அதன் பிறகு 7-வது மாதம் வளைகாப்பு நடத்தி பரிமளாவை அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து 10 மாதம் முடிந்த பிறகு பரிமளாவின் தாயார் குழந்தை பிறக்கும் தேதி குறித்து அவரிடம் கேட்டும் பரிமளா சரியான பதில் அளிக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பரிமளாவின் தாயார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது இத்தனை மாதங்கள் வயிற்றில் துணியை கட்டி கர்ப்பிணி போல் நடித்தது பரிமளாவின் கணவருக்கும், அவரது தாயாருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் கோபத்தில் பரிமளாவின் கணவர் ராஜ்குமார் அவரிடம் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பரிமளா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.