இயக்குனர் ராஜமௌலி மீண்டும் நடிகர் பிரபாஸுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்த இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தில் ராணா, அனுஷ்கா, சத்யராஜ், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார்.
இதையடுத்து இயக்குனர் ராஜமௌலி தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி மீண்டும் நடிகர் பிரபாஸுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்களை நிறைவு செய்தபின் பிரபாஸ் இயக்குனர் ராஜமௌலி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.