மகன்கள் நுங்கு கேட்டதால் மரத்தில் ஏறி பறிக்கச் சென்ற தந்தை நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்திலுள்ள உத்தமசோழபுரம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை கலியபெருமாள் மகன்கள் இருவரும் அவரிடம் நுங்கு வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதனால் கலியபெருமாள் அவரது வீட்டின் பின்புறம் உள்ள பனை மரத்தில் இருந்து நுங்கு பறிக்க ஏறியுள்ளார். அந்த சமயத்தில் அவர் நிலை தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.