கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இந்த கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்தார். கடந்த 7ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து முதல்வராக பதவியேற்ற இரண்டு நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.