சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலிருந்து வார்னரை , பிளேயிங் லெவலில் நீக்கியது கடினமான முடிவு தான், என்று அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 8 அணிகளில் ஒன்றான , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இருந்து வந்தார். இந்த சீசனில் அவர் தலைமையில் நடைபெற்ற 5 போட்டிகளில் ஹைதராபாத் அணி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, 4 தோல்விகளைச் சந்தித்தது. இதனால் அந்த அணியில் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அதே அணியில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து வீரரான கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்தது.
இதனால் புள்ளி பட்டியலில் 6 தோல்விகளுடன் , 2 புள்ளிகளை எடுத்து கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால் நேற்றைய போட்டியில் வார்னர் பிளேயிங் 11 அணியிலும் இடம் பெறவில்லை. இதுகுறித்து ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரான டிரெவர் பயாலிஸ் கூறும்போது, ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவலில் இருந்து , டேவிட் வார்னரை சேர்க்காதது கடினமான முடிவுதான். டேவிட் வார்னர் ஒரு சிறந்த வீரர் என்றும் அணியிலிருந்து அவரை நீக்கியது மிகவும் கடினமாக உள்ளது என்றும் , மிகுந்த ஏமாற்றத்தை தருவதாகவும் கூறினார். அதோடு அணியின் நலனை கருத்தில் கொண்டு ,மாற்று வீரரை தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்