மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அற்புதம் நகரில் மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணவரை பிரிந்து 20 வருடங்களாக அவருடைய மகன் அனீஸ் ஜஸ்டினுடன் வசித்து வந்துள்ளார். இதனிடேயே அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதிக்கும் மாமியார் மேரிக்கும் இடையே அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மேரி மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் எல்லோரும் இரவு தூங்க சென்ற பிறகு வீட்டிற்கு பின்புறம் சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு மேரி தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து காலையில் மருமகள் புஷ்பரதி கோழிக்கூண்டை திறப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது மேரி உடல் கருகி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.