நடிகர் பார்த்திபன் கொரோனா தடுப்பூசி குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார். அதனால் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டு முகம் வீங்கியது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று நினைத்து அவர் அந்த பதிவை அதன்பின் நீக்கிவிட்டார்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, என் அன்பு மகள் கீர்த்தனா இத்தகவலை பதிவுச் செய்யச் சொன்னார். எனவே இது நூறு சதவிகித உண்மை! ஒவ்வாமை (allergy)சில சமயங்களில் உணவு,ஒப்பனை,அதிக ஒளி இப்படி பல காரணங்களால் வந்ததுண்டு.
பணவீக்கத்தை விட முகவீக்கம் குறைவாகவே ஏற்படும். இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது. ஒரே நாளில் சரியாகியும் விட்டது.எனவே தடுப்பூசி அவசியமானது. ஆனால் ஜூரம், உடல் வலி போன்ற ஒரு reaction வந்து போகலாம்.என் உடல் நலன் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.