தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி பிளஸ் 1 சேர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு வைத்தால் அந்த பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் இதுபோன்ற நுழைவுத்தேர்வு நடத்துவதாக புகார் எழுந்து சோதனை நடத்தப்பட்டதாகவும், எக்காரணம் கொண்டு மாணவர்களை பள்ளிக்கு வர வைக்க கூடாது எனவும் கூறியுள்ளது.