பெரம்பலூரில் லாரி ஓட்டுநரை தாக்கியதற்காக சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மனப்பாடி இந்திரா நகரில் வசித்து வரும் லாரி ஓட்டுநரான மதியழகனுடைய அக்காள் அமிர்தவள்ளி கீழக்கணவாய் கிராமத்தில் வசித்து வருகிறார். அமிர்தவள்ளியின் மூத்த மகனான சந்துருவை அதே பகுதியில் வசித்து வரும் மாசி என்பவரது மகன் பார்த்திபன் முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளார். இதனை மதியழகன் தட்டிக்கேட்க சென்ற போது பார்த்திபன் மற்றும் 17, 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட சிலர் அவரை தாக்கியதாகவும், ஜாதி பெயரை கூறி அவரை திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மதியழகன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பார்த்திபன், 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து மதியழகனை தாக்கிய மற்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்