திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டன்பட்டி கிராமம் செல்லும் வழியில் 20 அடி அகலம் கொண்ட வாய்க்கால் ஒன்று உள்ளது. அந்த வாய்க்காலையும், அதன் அருகே உள்ள தரைப்பாலத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை அகற்றக்கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலகவுண்டன்பட்டி கிராம மக்கள் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பு பகுதி அருகே திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கு அதிகாரிகள் யாரும் வராததால் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வருகிற 26-ஆம் தேதி ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.