நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜனுக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மூடியுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாக வழங்க வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டிருந்தது. இந்நிலையில் கொரோனாவால் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை தயாரிக்க அனுமதி தரலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றிய அனைத்து விஷயங்களையும் தாங்களே முன்வந்து விசாரிப்போம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.