சேலம் மாவட்டத்தில் புளி வியாபாரியிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறித்து சென்ற சிறுவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கோம்பூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். புளி வியாபாரம் செய்து வரும் செல்வம் வலசையூர், ஆச்சாங்குட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் செல்வத்தை வழிமறித்து போலீஸ் என கூறி அவரிடமிருந்து 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான். இதுக்குறித்து செல்வம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வின் போது அவர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுவனை கைது செய்த காவல் துறையினர் வியாபாரியிடம் இருந்து பணம் பறித்ததற்க்காக சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.