கனரா வங்கியின் பெண் மேலாளர் வங்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் தோக்கிலங்காடி பகுதியில் கனரா வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த வங்கியின் மேலாளராக ஸ்வப்னா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இவர் நேற்று முன்தினம் வங்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காலை 9 மணிக்கு வங்கிக்கு வேலைக்கு வந்த ஒரு பெண் பணியாளர் இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அவர் உடன் பணிபுரிபவர்களுக்கும் அருகில் உள்ள மக்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பேரில் அவர்கள் ஸ்வப்னாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் ஸ்வப்னா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த கடிதத்தில் “வேலைப்பழு காரணமாகதான் நான் தற்கொலை செய்து கொண்டேன்” என எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.