நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே சிகார் ஆற்றங்கரை பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் காரைக்காலில் இருந்து கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கீழ்வேளூர் அருகே சிகார் ஆற்றங்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர் புதுப்பத்தூர் தெற்கு தெருவில் வசித்து வரும் சக்கரபாணி (65) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சக்கரபாணி மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.