நிறுவனத்தை கூல் மற்றும் ட்ரெண்டிங்காக வைத்துக் கொள்ளும் நோக்கில் ஐபிஎம் நிறுவனம் சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான ஐபிஎம் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் நிறுவனத்தின் கொள்கை மற்றும் இலக்கை நோக்கி பயணிக்க இயலாத சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக பணி நீக்கம் செய்ததாக நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஆனால் நிறுவனம் பாரபட்சத்துடன் வயது முதிர்ந்தவர்களை பணியிலிருந்து நீக்கி அதற்கு பதிலாக இளம் பணியாளர்களை அமர்த்தி வருவதாக நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட மூத்த ஊழியர் ஜோதன் அங்கிள் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான ஐபிஎம் மனிதவள மேம்பாட்டுத் துறையின் தலைவர் அமேசான், கூகுள் நிறுவனங்களைப் போல கூல் மற்றும் ட்ரெண்டியாக இருக்க கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததில் வயது பாகுபாடு இல்லை என்று தெரிவித்த அவர், ஆண்டுக்கு 50 ஆயிரம் பேரை ஐபிஎம் நிறுவனம் பணியமர்த்தியது என்றும் நாளொன்றுக்கு 8,000 பணி கோரும் விண்ணப்பங்களை நிறுவனங்கள் பெறுவதாகவும் தெரிவித்தார். இதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பயணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.