வாக்களிக்க கூடாது என அதிகாரிகள் மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் திடீரென எண்ணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில், அந்தியூர் வழியாக சென்ற பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திருக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பொதுமக்கள் ‘எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது எனவும், அதிகாரிகள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாததால் வாக்கு பதிவு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அதிகாரிகள் 3 முறை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமில் கலந்து கொண்டு வாக்காளர்பட்டியலில் சிலர் பெயர் சேர்க்காத காரணத்தினால், இந்த வருடம் வாக்களிக்க முடியாது எனவும், அடுத்த வருடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொண்டு அடுத்த தேர்தலில் ஓட்டுப் போடுங்கள், எனவும் கூறியுள்ளார். அந்த கோபத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின் சிறைப்பிடித்து வைத்திருந்த பேருந்தை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.