பெட்ரோல், டீசல் விலை உயர்வை நினைவூட்டும் வகையில் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், சூர்யா, ரஜினி, கமல் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்களது வாக்கு பதிவினை செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இதனிடையே நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார்.
அவரது இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடிகர் விஜய் வாக்களித்துள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ட்விட்டரில் #PetrolDieselPriceHike என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இது ஆளும் மத்திய மாநில கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலையிலேயே மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இருந்த நிலையில் நடிகர் விஜய் பெட்ரோல் டீசல் விலை உயர்வை நினைவூட்டும் வகையில் வாக்களித்தது மக்களின் எண்ண ஓட்டத்தை மாற்றி உள்ளார். குறிப்பாக வாக்குச்சாவடிக்கு செல்லும் முன்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை நினைத்து வாக்களிக்க வேண்டுமென்று மக்களின் மனதை நடிகர் விஜய் திருப்பி விட்டதைப் போல உள்ளதால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.