நாளை வாக்குப்பதிவின் போது சட்டவிரோதமாக ஆட்கள் கூடுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் அசம்பாவிதங்களை தடுக்க 7 ஆம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட ஆட்சியர், “144 தடை உத்தரவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காது. நாளை வாக்குப் பதிவின்போது சட்டவிரோதமாக ஆட்கள் கூடுவதை தடுக்க வேண்டிய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.