தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த ஐந்து நாட்கள் தமிழகத்தில் அனல் காற்று வீசும். ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இயல்பை விட 4முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அனல் காற்று வீசும் என்பதால் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம். சூழ்நிலை கருதி வெளியே சென்றால் குடையை கையில் கட்டாயமாக எடுத்துச் செல்லுங்கள். மேலும் மோர் மற்றும் தர்பூசணி போன்ற குளிர்ச்சி பொருட்களை அதிக அளவில் உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.