பெரம்பலூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் நகரில் போக்குவரத்து விதிமுறைகள் வாகன ஓட்டிகளால் மீறப்படுகிறது. குன்னம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கொளப்பாடி-வேப்பூர் சாலையில் கல்லங்காடு பகுதி அருகே கடந்த மாதம் 28-ஆம் தேதி மொபட்டில் ஆறு பேர் சென்றபோது மொபட் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேரில், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். சாலை போக்குவரத்து விதிகளை பெரம்பலூர் நகர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் சரியாக பின்பற்றுவதில்லை. மேலும் இரண்டு பேர் மட்டுமே இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும். விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களின் மூன்று அல்லது நான்கு பேர் சென்று கொண்டிருக்கின்றனர்.
அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் பல இடங்களில் நகர் பகுதியில் வரன்முறையற்று ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்ற வண்ணம் உள்ளனர். சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் கடை வீதிகளிலும் அதே பிரச்சனையாக உள்ளது. பலர் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். மேலும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் செல்கின்றனர்.
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசிக்கொண்டே செல்கின்றனர். பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி செல்வது பெரம்பலூர் நகர்ப்பகுதியில் தொடர்கதையாக உள்ளது. பெரம்பலூர் நகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு கொண்டே வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் போது அதற்குரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.