உத்திரப்பிரதேச மாநிலத்தில் போலி டாக்டர் செய்த தவறினால் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சையின் போதே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுல்தான்பூர் என்ற நகரில் பூனம் என்கிற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு கடந்த வியாழக்கிழமை பிரசவ வலி அதிக அளவில் ஏற்பட்டதால் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ராஜேந்திர குமார் சுக்லா பிரசவம் பார்த்துள்ளனர்.
அப்போது அப்பெண்ணிற்கு சுகப்பிரசவம் ஆக வாய்ப்பில்லை என்று கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அந்த சிகிச்சைக்கு பிறகு எதிர்பாராதவிதமாக தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த பூனம் உறவினர்கள் டாக்டர் ராஜேந்திர குமார் சுக்லா மற்றும் மருத்துவமனை நிர்வாகி ராஜேஷ்குமார் சாகினி மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
அத்தகவலை அறிந்த போலீசார் விசாரணை செய்ததில் ராஜேந்திரகுமார் போலி டாக்டர் என்பதும், அவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பின் மருத்துவமனையின் நிர்வாகி ராஜேஷ்குமார் சக்னி பிளஸ்- 2 படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த விசாரணைக்கு பின்பு அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.