காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது நடுரோட்டில் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மட்டுமன்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து கட்சி வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அதனால் சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாந்தி சாலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் கமலின் கார் கண்ணாடி உடைந்தது. மேலும் தாக்குதல் நடத்திய நபரை பிடித்து மக்கள் நீதி மையம் தொண்டர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.