கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டத்தின் போது மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், அதனை தமிழக அரசு ரத்து செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வரும் நிலையில், ஆந்திரா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ-பாஸ் உடன் சேர்த்து கொரோனா இல்லை என பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இல்லையென்றால் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும், எந்த வாகன சோதனையில் சான்றிதழ் கேட்டாலும் காட்ட வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.