சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊதிய உயர்வு மற்றும் பணி ஓய்வு பணப்பயன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பெரும்பாலான இடங்களில் நேற்று பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. அதனால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டனர்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன், 14 வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க கோரி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கத்தை விட மிகக் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் சென்னையிலும் பேருந்துகள் ஓடாத நிலையில், ஷேர் ஆட்டோக்கள் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. 20 ரூபாய்க்கு வசூலிக்கப்படும் இடங்களுக்கு 40 ரூபாயும், 40 ரூபாய்க்கு வசூலிக்கப்படும் இடங்களுக்கு 60 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. கால் டாக்ஸிகளும் கட்டணத்தை உயர்த்தி உள்ளன என மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.