Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆற்றில் தண்ணீர்… ஓடுதோ, இல்லையோ….! மூலை முடுக்கில் ”அது”… அரசை வெளுத்த நீதிபதிகள் …!!

மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துங்கள்  என்று ஐகோர்ட் மதுரை கிளை யோசனை கூறியிருக்கின்றது. மதுரையை தட்டான்குளம் மேலூர் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்தவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மார்க் கடை பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு பிறகு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கடை மூடப்பட்டது குறித்தும் தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளில் அமைவிடம் தொடர்பாக வந்த புகார்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து இருந்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த விரிவான உத்தரவில், பள்ளிக்கூட மற்றும் குடியிருப்பு பகுதி அருகே வைப்பதற்கு மதுபான கடைகள் ஒன்றும் புத்தகக் கடை, மளிகை கடைகள் அல்ல. மது விற்பனை மூலமாக வரும் வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில்  மூழ்கி உள்ளது. இது குறித்து அரசு கவலை கொள்வதில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் கண்ணீரை துடைக்கும் வகையில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்துகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் மதுபான விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும்  தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளிலெல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். இதனை நீதிமன்றத்தின் வலியுறுத்தலாக மட்டும் பார்க்காமல் ஒட்டு மொத்த சமூகத்தின் குரலாக பார்க்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

தொடர்ந்து மதுவிலக்கை அமல்படுத்தினால் ஏராளமான குற்றங்கள் குறையும். தனிநபர் வருமானம் உயரும். குடிகாரர்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும் என்பது உள்ளிட்ட பல்வேறு நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்படும். ஆனால் நீதிமன்றத்தின் இந்த யோசனைகளை தமிழக அரசு உற்றுநோக்கி கவனிக்குமா ? என்ற கேள்வியையும் எழுப்பி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவு  பிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |