தஞ்சாவூரில் இரட்டை பெண் குழந்தைகளை குரங்குகள் தூக்கி சென்றதாக பெண் அளித்த புகாரை வனத்துறையினர் சந்தேகித்துள்ளனர்.
தஞ்சாவூரில் வசிப்பவர் புவனேஸ்வரி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்குகள் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி சென்று விட்டதாக புவனேஸ்வரி கூறியுள்ளார். அவற்றில் ஒரு பெண் குழந்தை வீட்டின் கூரையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மற்றொரு குழந்தையை தேடினர். அப்போது அந்த குழந்தை புவனேஸ்வரியின் வீட்டிற்கு அருகில் இருந்த அகழியில் சடலமாக மீட்கப்பட்டது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் புவனேஸ்வரி தனது குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்றது என்று கூறிய குற்றச்சாட்டை சந்தேகித்துள்ளனர்.
இதற்கு காரணம் குழந்தைகளை குரங்குகள் தூக்கி சென்றால் குழந்தையின் உடம்பில் கீறல்கள் இருக்கும். ஆனால் இந்த குழந்தையின் உடலில் அப்படி எந்த ஒரு காயமும் இல்லை. எனவே என்ன நடந்தது? என்பதை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.