கொரோனா தடுப்பூசி போட்ட மூவருக்கு மயக்கம் ஏற்பட்டதற்கு தடுப்பூசி காரணமில்லை என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 122 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மட்டும் இதுவரை 2908 பேருக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என 220 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட 220 பேரில் விமலா மேரி, மனோகர், சாந்தி ஆகிய மூன்று பணியாளர்களும் தடுப்பூசி போட்ட இரண்டு மணி நேரத்தில் மயக்கம் அடைந்தனர்.
பின்னர் இவர்கள் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றுவரும் மூவரையும் மருத்துவ கல்லூரி முதல்வர் மருததுரை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் தடுப்பு ஊசி போட்டதால் அவருக்கு மயக்கம் ஏற்பட வில்லை, தடுப்பூசியால் எந்த ஒவ்வாமை பாதிப்பும் கிடையாது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்பதால் தான் மயக்கம் ஏற்பட்டதாகவும் இதுவரை எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை எனவும், தடுப்பூசி போட சொல்லி மருத்துவமனை நிர்வாகம் யாரையும் கட்டாய படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.